தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து இருவர் வீட்டிலும் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று மதியம் 12-56 செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து விருகம்பாக்கம் போலீஸார் சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் அப்படி எதுவும் இல்லை என தெரியவந்தது. பிறகுதான் இது வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதேபோல் மதியம் 2-30 மணி அளவில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்புக்கொண்ட அந்த நபர் சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமபுரம் வெங்கடேஸ்வரா அப்பார்ட்மெண்டில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சென்னை அபிராமபுரத்தில் நடிகர் தனுஷ் வசிக்கும் அபார்ட்மெண்டுக்கு போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் அழைப்பு மரக்காணம் பகுதியில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரின் செயலாக இருக்கும் என போலீஸார் கருதுகின்றனர்.
போலீஸாருக்கு பெரும் தலைவலியாக இருக்கும் இந்த இளைஞர் இதற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய், நடிகர் அஜித் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர். சமீபத்தில் சூர்யா வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கினார்.
காவல் கட்டுப்பாட்டறைக்கு போன் செய்து மிரட்டல் விடுப்பது அவர் மனதில் பதிவாகி விட்டது. இதனால் அவர் தொடர்ந்து யாராவது ஒரு விஐபி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்கிறார். இதை புரளி என போலீஸார் தள்ளிவிடவும் முடியாது. இதனால் போலீஸார் நிம்மதியிழந்துள்ளனர்.