
திருப்பரங்குன்றம் அருகே வைகாசி திருவிழா கோலாகலம்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் கண்மாய் கரை அருகே வீற்றிருக்கும், பிரசித்திபெற்ற உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த 19ம் தேதி செவ்வாய் கிழமை செவ்வாய்சாட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். செவ்வாய் சாட்டிய நாளிலிருந்து அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனின் சக்தி பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. நேற்று 26- ம் தேதி காலை முதல் மாலை வரை மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோயில் முன்பு பொங்கலிட்டு, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி கிராமப்பொதுமக்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தியார்குண்டு கண்மாய் கரையில் இருந்து மேளதாள ஊர்வலத்துடன் கோவில் பூசாரி “பூக்கரகம்” எடுத்து வந்து கோவில் பிரதட்சனம் செய்யப்பட்டு அம்மனின் சக்தி பீடத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று 27.05.2026 புதன்கிழமை மாலை 4 மணியளவில் காப்பு கட்டிய பக்தர்கள் முளைப்பாரி சட்டி தூக்கி, மேள, தாளத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள நிலையூர் பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.