சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட தக்காளி, இன்று (சனிக்கிழமை) கிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பெரம்பூர், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் முதல் தர தக்காளி ரூ.100 ஆகவும், சிறிய ரக தக்காளி கிலோ ரூ.70-க்கும் விற்கப்பட்டு வருகிறது.மற்ற காய்கறிகளான அவரைக்காய் ரூ.80, பீன்ஸ் ரூ.60, நூக்கல் ரூ.50, கேரட் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.35, முள்ளங்கி, முருங்கைய்காய், பீட்ரூட், பச்சை மிளகாய், வெண்டைக்காய் தலா ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.28, பாகற்காய் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.23, கத்தரிக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.14, புடலங்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, “கடந்த 3 வாரங்களாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு தக்காளி அனுப்பும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் பருவமழை குறிப்பிடும்படியாக பெய்யாமல், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தக்காளி உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு தக்காளி விலை ஏற்ற, இறக்கத்துடன் தான் இருக்கும்” என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.