திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் முதலாவதாக கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டது. 2-வது முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
கோவில் செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா, செல்வராஜ், ஆய்வாளர்கள் முருகன், நம்பி, சிவலோகநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர்.
கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 1 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 91 ரூபாய் கிடைத்தது. நேற்று எண்ணப்பட்ட நிரந்தர உண்டியல், கோசாலை உண்டியல், கோவில் அன்னதான உண்டியல், சிவன் கோவில் அன்னதான உண்டியல், நாசரேத் கோவில் அன்னதான உண்டியல், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியல், குலசேகரன்பட்டினம் கோவில் உண்டியல் போன்றவற்றில் பக்தர்கள் 1 கோடியே 26 லட்சத்து 332 ரூபாய் காணிக்கையாக செலுத்திருந்தனர். இந்த மாதம் மொத்தத்தில் 2 கோடியே 53 லட்சத்து 27ஆயிரத்து 423 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல் இந்த மாதம் மொத்தத்தில் 1524 கிராம் தங்கமும், 34 ஆயிரத்து 5 கிராம் வெள்ளியும், 51 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.