தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், அக்டோபர் 2-ந் தேதி (இன்று) காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கிராமசபை கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதற்கான உத்தரவை அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனரகம், அனைத்து ஊரக உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தகவல் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியாளர் சு.சிவராசு வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளில் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்கவும், பொது மக்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல மற்ற மாவட்ட ஆட்சிர்களும் உடனடியாக கூட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர்.
மேலும் கிராமசபை கூட்டம் ரத்து குறித்து சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது:
கூட்டம் நடத்தினால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரால் முதல்வர் வருகை, அமைச்சர் வருகை, நலத்திட்ட உதவி வழங்கும் விழா என ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கூட்டம் நடத்தும் போது கொரோனா பாதிப்பு ஏற்படாதா.?? எனவும் தற்போது உள்ள இளைஞர்கள் சமூக அக்கறை உள்ளவர்களாகவும்,கிராமசபை குறித்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் அதிகமாக பதிவிட்டு வருவதாலும், இந்தமுறை கிராமசபை கூட்டத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்தும், 14 வது, 15வது மானியக்குழு நிதி குறித்தும், கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்படும் என அச்சப்பட்டே தமிழக அரசு கொரோனாவை காட்டி இக்கூட்டத்தை ரத்து செய்ததாக சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் தெரிவித்தனர்..