மதுரை திருப்பரங்குன்றம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டியில் 6வது வார்டில் உள்ளது இந்திரா காலனி. இந்த காலனியில் கடந்த 1997-1998ஆம் ஆண்டில் 40 குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டன.
பல வீடுகளில் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி சேதமடைந்து கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்திரா காலனியை சேர்ந்த காஞ்சிக்குமார்(23) என்பவர் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் இடிந்து விழுந்த மேற்கூரை கான்கிரீட் கற்கைளை அப்புறப்படுத்தி அதனுள் சிக்கிக் கிடந்த காஞ்சிகுமாரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து திருப்பரங்குன்றம் வருவாய் வட்டாட்சியர் நேரில் சென்று இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டார்.