குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2000 வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு டிசம்பர் 28-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்றும், இதனால் 249 கோடியே 76 லட்சம் செலவு ஏற்படும் என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,000 ரூபாய் ரொக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், 2009-ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த கருணாநிதி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி 2011-ஆம் ஆண்டு வரை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2012-ஆம் ஆண்டில் பரிசு தொகுப்பு கொடுக்கவில்லை எனவும், 2013-ல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 100 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது மறைவிற்கு பிறகு 2016-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், கொரோனா காலகட்டத்தில் 2,500 ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் மோகன்தாஸ் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, முதல்வரான ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதன்பின்னர் வந்த பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகுப்பு மட்டும் வழங்கியதாகவும், ரொக்கத்தொகை ஏதும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததை கருத்தில்கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கத்தொகை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பில், அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு ரொக்கத்தொகை தொடர்பான அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆண்டுகளில் மட்டும் பரிசுத்தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், இந்த ஆண்டும் பரிசுத்தொகுப்புடன் 2,000 ரூபாய் ரொக்கத் தொகையும் சேர்த்து வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் டிசம்பர் 30-ல் கோரிக்கை மனு அளித்ததாகவும், ஆனால் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!