சிவன் மீதான ஆர்வத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தனும்… மனம் திறந்த இயக்குனர் சமுத்திரக்கனி!

       சமுத்திரக்கனி 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ல் ராஜபாளையம் சேத்தூர் கிராமத்தில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சினிமா பார்ப்பது தவறு என்ற தந்தையின் சொல்லை ஆழமாக நம்பியதால் தனது 13வது வயது வரை ஒரு சினிமா கூட பார்த்ததே இல்லை. பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்புகளுக்குப் படிக்கச் சென்றபோது வகுப்பைப் புறக்கணித்து விட்டு நண்பனின் கட்டாயத்தின் பேரில் படம் பார்க்கச் சென்றார். அப்படி அவர் பார்த்த முதல் படம் ‘முதல் மரியாதை’ ..மனதைப் பிழிந்தெடுத்த அந்தப் படத்திலிருந்து மீள முடியாமல் தினம் படம் பார்க்கச் செல்ல ஆரம்பித்தார். நுழைவுச்சீட்டுக்காக முறுக்கு விற்றார். விஷயம் வீட்டிற்கு தெரிந்து தர்ம அடிவாங்கிக் கொண்டு நேரே அவர் சென்ற இடம் திரையரங்கம் தான்… படங்களின் மீது ஏற்பட்ட தீராக் காதலால் தமது 15வது வயதில் ரூ.130 யுடன் சென்னைக்குப் புறப்பாட்டார்..பாக்யராஜ் மற்றும் டி.ஆர்.ராஜேந்திரன் பரம ரசிகன் . சென்னையில் எங்கு செல்வதென்று கூடத் தெரியாமல் நடத்துனரிடம் குத்து மதிப்பாக ஒரு நிறுத்தத்தைத் சொல்லி இறங்கி சுற்றித் திரிந்தார்.

      மனிதர்களின் மீதான அவரது நம்பிக்கை என்றுமே வியக்கத்தக்கது! அதற்கு வித்திட்டது அண்ணா பாலத்தில் அவருக்கு உதவிய போலீஸ்காரர் … ‘நான் சென்னையில் சந்தித்த முதல் மனிதர் நல்லவர்’ என்பார் இன்றும் .அதனாலோ என்னவோ அவர் படத்தில் கண்டிப்பாக ஒரு ஏட்டையா கதாப்பாத்திரம் நிச்சயம் இடம்பெறும்.

இன்னும் பல சுவாரசிய தகவலுடன் மனம் திறக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி…


எனக்குச் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பக்கத்துல சேத்தூர். இப்போது தான் பேரு வைக்கிறதுனா பெரிய அளவுல விழா நடத்திப் பேரு வைக்கிறோம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாம் வகுப்பு சேரப் போனப்போதான் எங்க ஐயா எனக்கு `சமுத்திரக்கனி’னு அவருடைய ஃப்ரெண்டு பேரை வெச்சார்.

அதுக்கு முன்னாடி என் பேர் தங்கப்பவுனு. பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது பவுனுனு பேரு வெச்சிட்டா, பின்னால பையனைக் கூப்பிடும்போது வருத்தப்படுவான்'னு வேற பேரு வைக்கச்சொல்லியிருக்கார் வாத்தியார். அப்படி வெச்சபேருதான் சமுத்திரக்கனி. என்ன அர்த்தம்பான்னு கேட்டேன். சமுத்திரத்தில விளையுற கனி,முத்து’னு சொன்னார்.

நான் பி.எஸ்ஸி மேக்ஸ்தான் படிச்சேன். ஆனா, வரலாறு பாடத்தின் மீது எப்பவும் ஆர்வம் உண்டு. குறிப்பாக நம் மூதாதையர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது நம்முடைய கலைகள், கோயில்கள், சிற்பங்கள் இவற்றைப் பார்க்கின்ற கண்ணோட்டமே மாறிப் போயிச்சு. நம்ம மூதாதையர்களின் வாழ்க்கை முறை அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடியதாகவே இருந்திருக்கு. ஆனா, அவங்க அறிவியலைப் பின்னுக்கு வெச்சு, வாழ்வியலை முன்னுக்கு வெச்சாங்க.

சின்ன வயசிலேருந்து நான் கும்பிட்டு வளர்ந்தது எங்க மூதாதையர், எங்க முப்பாட்டன் அய்யனாரைத்தான். அவர்தான் எங்க குடும்பத்துக்குக் குலதெய்வம். அப்பா அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அய்யனார்தான். காட்டுல காணாமப் போன மாடு கிடைக்கணும்னாலும் கடைச்சங்காட்டுல சாகுபடி நல்லா வரணும்னாலும் அம்மா மொதல்ல வேண்டுறது அய்யனாரைத்தான்.

அவரு மனசுக்குள்ளயே எப்பவும் இருக்குற ஓர் ஆள் மாதிரி. நல்லது, கெட்டது எது நடந்தாலும் முதல்ல அவர் ஞாபகம்தான் வரும். வாழ்ற வாழ்க்கைக்கைக்கு நன்றி சொல்றதுக்கும் ஒரு விஷயத்தைச் செய்யலாமா வேணாமானு முடிவெடுக்கிறதுக்கும் அய்யனார்தான் பக்கத் துணை.

அய்யனாருக்கு அடுத்துச் சொல்லணும்னா சிவன்தான். சிவனைப் பற்றிய செய்திகளைத் தெரிஞ்சுக்கிறதுல ஓர் ஆர்வம், பன்னெண்டு பதிமுணு வயசிலேயே வந்திருச்சு. சிவன் கோயிலுக்கு அடிக்கடிப் போவேன். சிவன் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். படிக்கப் படிக்க பக்தியைத் தாண்டி ஆன்மிகத்தை அறிவியலாகத்தான் பார்க்கமுடிஞ்சுது. பொதுவா சிவன் மீதான ஆர்வம் தலைமுறை தலைமுறையாக ஒருவருக்குக் கடத்தப்படக்கூடிய ஒண்ணாத்தான் நினைக்கிறேன்.

கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சைப் பெரிய கோயில் இதெல்லாம் மிகப்பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள். தமிழ்நாட்டுல இருக்கிற சிவன் கோயில்கள் பலவற்றுக்கும் பயணம் போயிருக்கேன். எங்க சதுரகிரி மலையிலயே ஏராளமான விஷயங்கள் புதைஞ்சுக் கிடக்குது.

என்னைப் பொறுத்தவரைக் கோயிலுக்குப் போய் சாமிக்கிட்டே `எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு’னு கேட்கிற பக்தியோகம்லாம் கிடையாது. நம்மால யாருக்கும் எந்தக் கெடுதலும் வந்துடக் கூடாது. நம்மால எந்த அளவு முடியுமோ அந்த அளவு உதவி பண்ணணும்ங்கிறதுதான் ஆன்மிகம்” என்றார் இயக்குநர் சமுத்திரக்கனி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!