தூத்துக்குடி-மாலத்தீவு இடையே சரக்கு கப்பல் போக்குவரத்துசேவை தொடக்கம்..

தூத்துக்குடியில் இருந்து கொச்சி வழியாக மாலத்தீவிற்கு சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று துவங்கியது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூனில் மாலத்தீவிற்கு அரசுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது எடுத்த முடிவுகளின்படி இந்தியாவில் இருந்து மாலத்தீவுகளுக்கு சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று சரக்கு கப்பல் துாத்துக்குடி வ.உ.சி.,துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. இதில் மின்சாதனங்கள், பர்னிச்சர், மருந்துபொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் உள்ளன.

காணொளியில் நடந்த துவக்க விழாவில் இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாலத்தீவுகள் போக்குவரத்து அமைச்சர் ஆயிசாத் நகுலா ஆகியோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் இருந்து இன்று கிளம்பிய சரக்குக் கப்பல் நாளை செப்.,22ல் கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் சென்றடையும்.

பின்னர் அங்கிருந்து மாலத்தீவுகளின் குல்குதுபுசி துறைமுகத்திற்கு செப்., 26ல் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு மாலே துறைமுகத்திற்கு செப்.,29ல் சென்றடையும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த கப்பல் போக்குவரத்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி துறைமுக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

error: Content is protected !!