தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன் (70) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார்.
பேராசிரியர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இதுவே சனநாயகம், சமயங்களின் அரசியல், இந்து தேசியம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
தமிழ் மக்கள் திறள் பண்பாடு, வழிபாடுகள் குறிட்து தொ.ப-வின் ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய நோக்கில் அமைந்தவை. மக்கள் பண்பாடு, வழிபாட்டு முறைகள் குறித்து திராவிட கருத்தியலுடன் முன்வைத்தவர்.

தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஆளுமையாகவும் ஆய்வாளராகவும் விளங்கிய தொ.பரமசிவன் முதுமை காரணமாக உடல்நலிவடைந்திருந்தார். இந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு என்று எழுத்தாளர்கள், தலைவர்கள், மாணவர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
