குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணி மாற்றம் செய்யக் கோரி 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்.
குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் விசித்திரா. இவர் தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை சரியாக செய்வதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர்களையும் அவர்களது கருத்துக்களையும் மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 பஞ்சாயத்துகளிலும் உள்ள 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடம் மாற்றம் செய்ய கேட்டு 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் அனுமதியின்றி தக்கலை ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 10-ஊராட்சி ஒன்றிய தலைவர்களை தக்கலை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.