இந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காணமுடியாமல் சுற்றுலாபயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
2020-ம் ஆண்டு முடிந்து இன்று புத்தாண்டு 2021 பிறந்தது.கடந்த ஆண்டின் பெரும்பாலான நாட்கள் கொரோனாவுடன் காலம்தள்ளிய பொதுமக்கள் பல்வேறு இன்னலைசந்தித்தனர்.தற்போது கொரோனா கட்டுபாடுகள் தளர்வு ஏற்பட்டநிலையிலும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுபாடுகள் அமுல்படுத்தப்பட்டது.இரவில் சுற்றுலாபயணிகள் கன்னியாகுமரிக்கு வர தடைவிதிக்கப்பட்டது.

ஆனால் ஆண்டின் இறுதிநாளான டிசம்பர் 31-ம் தேதி நேற்று மாலையில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.நேற்று மதியத்திற்கு மேல் சாரல்மழை பெய்த இதமான சூழலில் மாலையில் ,மழை ஓய்ந்து குளிர்ந்த காற்றுவீசியதால் முக்கடல்சங்கமம்,கடற்கரைசாலை போன்ற இடங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய அஸ்தமனம் தெரியாததால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றமடைந்தனர்.