நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக நடிகர் அர்ஜுன் மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர்கள் நடித்த ‘கிரி’ திரைப்படத்தில் ஒரு சில காட்சியில் காமெடி நடிகர் மதன்பாபு அடிக்கடி கூறுவதைப் போல் “இந்தா வந்துட்டேன்..” என தனது ரசிகர்களை திரட்டி அடிக்கடி கூறி வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகத்தில் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது என்கிற விவாதங்கள் களைகட்டி இருக்கின்றன.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவதாக அறிவித்திருப்பது “நாம் தமிழர் கட்சிக்குதான் ஆதாயமாக அமையப் போகிறது..என பட்டியல் போட்டு சமூக வலைதளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் ஆதரவு தரப்பு #இப்போஇல்லேன்னாஎப்பவும்இல்ல, #Rajinikanth என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சி பதிவிட்ட #தமிழ்நாட்டைதமிழர்ஆளனும் என்ற முழக்கம் டிரெண்டிங் ஆனது.
“ரஜினியின் அரசியல் பிரவேசம் நாம் தமிழர் கட்சிக்கு எப்படி ஆதாயமாக அமையப் போகிறது..?? வெல்கம் ரஜினி சார். வி ஆர் வெயிட்டிங் ” என்ற தலைப்பில் போட்ட பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவது போன்ற ஒரு மகிழ்ச்சியான செய்தி போல நாம் தமிழருக்கு வேறு எதுவும் இல்லை.
நாம் தமிழர் கட்சி அடையப்போகும் ஆதாயங்கள்.
எங்களுக்கு பாதிப்பு கிடையாது..
நாம்தமிழர் கட்சிக்கான ஆதரவு வாக்குகள் ரஜினி வருகையால் எந்த ஒரு பாதிப்பையும் சந்திக்காது. ஏனெனில் ரஜினியை ஆதரிக்கும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு , தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானவர்களே.
உரிமை முழக்கம் விண்ணைப் பிளக்கும்..
ரஜினியின் அரசியல் பிரவேசம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு மிகுந்த வலுவையும், கவர்ச்சியையும் ஏற்படுத்தும். மண்ணின் மைந்தர்களுக்கான உரிமை முழக்கம் விண்ணைப் பிளக்கும்.
இளம் பேச்சாளர்களுக்கு கொண்டாட்டம்..
மிகு உணர்ச்சி கொண்ட, இந்துத்துவா அரசியல் பேச இருக்கிற, பெரிதாக அரசியல் புரிதல் இல்லாத ரஜினி.. நமக்கு, நமது பிரச்சாரத்திற்கு, நிறைய content தருகிற எந்திரமாக மாறிப் போவார். 2016 விஜயகாந்த் போல நாம் எதிர்த்து பேச பல விஷயங்களை ரஜினி வாரி வழங்குவார். நாம் தமிழர் கட்சியின் இளம் பேச்சாளர்களுக்கு இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம்தான்.
கனவுக் கோட்டை சுக்கு நூறாக உடையும்..
ரஜினி போன்ற மாயை ஒரு தேர்தலோடு உடைவது நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்தது. வெறும் சினிமா மாயையை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் பாதையை செய்ய முடியாது என்கின்ற செய்தியை வழங்க இருக்கிற கடைசி நடிகராக ரஜினி திகழ்வார். வெறும் சினிமா கவர்ச்சியை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்து விடலாம் என்று நினைக்கிற நடிகர்களின் கனவு கோட்டையை ரஜினியின் மகத்தான தோல்வி சுக்குநூறாக உடைத்து போடும்.
தமிழ்த் தேசிய அரசியல் கூர்மையடையும்..
தமிழ்த் தேசிய அரசியல் இன்னும் கூர்மையடையும். ரஜினி போன்றவர்களின் அரசியல் வருகையால் நாம் தமிழர் கட்சியின் தேவை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அதிகரிக்கும்
வாருங்கள் ரஜினி சார்.
வி ஆர் வெயிட்டிங்.
என நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தது பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கuது.

