
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு!
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது மரபு. அந்த வகையில் கடந்த 2000வது ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கடந்த 2012க்கு பதிலாக 2011ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது திட்டமிட்டப்படி கோயிலின் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரத்தில், தங்க கலசம் பொருத்துவது உள்பட சில திருப்பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடந்த நாள், நட்சத்திரத்தை குறிக்கும் வகையில், கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து பூசம் நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஆகம விதிப்படி ஏற்கனவே மகா கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கோயிலின் துணை ஆணையர் நியமனம் செய்யப்படாமல் இருந்ததால் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கிடையே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் குறித்த எதிர்பார்ப்பு பக்தர்களிடையே அதிகரித்தது.
இந்தாண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில், புதிய படிக்கட்டில் உள்ள படிக்கட்டு விநாயகர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழநி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானங்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. தற்பொழுது சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் சுற்றுச்சுவர் மராமத்து பணி துவங்கியது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், சொக்கநாதர் கோயில் விமானங்களுக்கு மூங்கில் சாரங்கள் கட்டும் பணி துவங்கி கும்பாபிஷேகத்திற்காக மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தயாராகி வந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன்செல்லப்பா, மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் உரிய காலத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அறிவிக்கப்பட்ட ரோப்கார் சேவை போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும் பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் முதல் திருக்கழுக்குன்றம் வரை ரோப்கார் அமைக்கும் பணிக்காக 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும், வரும் ஜூலை மாதம் 16ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனவும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.