தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டப்பஞ்சாயத்து பிரச்னையில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாமல், உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, இறந்தவரின் குடும்பத்தினர் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன், 53, மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ஜமுனா,48. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் வெங்கடேசனுக்கும், நிர்வாகத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேசனையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக ஊர் பெரியவர்கள் கூறியுள்ளனர். மனமுடைந்த வெங்கடேசன் கடந்த, 15ல், எலுமிச்சங்கிரி அரசு துவக்கப்பள்ளி முன் தன் உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன் இறந்தார். ஆனால் வெங்கடேசனின் உடலை அவர்களது உறவினர்கள் வாங்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை எலுமிச்சங்கிரியில் வெங்கடேசனின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், நீதி வேண்டியும் அவரது உறவினர்கள், வாயில் கருப்பு துணியை கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, மகராஜகடை இன்ஸ்பெக்டர் தேவி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: எங்கள் ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, ஊரை விட்டு ஒதுக்கியதாக, ஊர் கவுண்டர்கள் ராமன், கிருஷ்ணமூர்த்தி, ஊர் பிரமுகர் கிருஷ்ணன், தேவேந்திரன், மற்றும் சின்ன கோவிந்தன் உட்பட எட்டு பேர் மீது வெங்கடேசன், கலெக்டர் முதல் வி.ஏ.ஓ., வரை புகாரளித்தார்; யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தவிர தன்னை திட்டி அவமானப்படுத்தியதாக மேலும், 6 பேர் மீதுள்ள கோபத்திலும், மனஉளைச்சலிலும் தற்கொலைக்கு முயன்றதாக தீக்காயங்களுடன் வெங்கடேசன் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

ஆனால் அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. நேற்று வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எலுமிச்சங்கிரி கிராமத்தில் வெங்கடேசனின் உறவினர்கள், 65 குடும்பத்தினர் உள்ளோம். நாங்கள் சாலை மறியலிலோ, ஆர்ப்பாட்டத்திலோ ஈடுபடவில்லை. வெங்கடேசன் மரண வாக்குமூலத்தின்படி அவரது தற்கொலைக்கு காரணமாகி வழக்கு பதியப்பட்டுள்ள,

14 பேரில், 5 பேரையாவது போலீசார் கைது செய்தால் சடலத்தை வாங்குவோம். இல்லையெனில் அவர்களை கைது செய்யும்வரை சடலத்தை வாங்காமல் போராடுவோம். இவ்வாறு கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!