
பழனியில் ஏறியது கொடி; மூன்றாம்படை வீட்டில் அமோகமாக தொடங்கியது தைப்பூசத் திருவிழா!
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி வரும் 10ஆம் தேதியும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில் தற்போது தைப் பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.
இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 10ம் தேதி மாலையும், தொடர்ந்து இரவு வெள்ளித்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. ஏழாம் நாள் திருவிழாவான 11ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக 500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தங்கும் அறைகள், குடிநீர், கழிவறை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோவில் நிர்வாகமும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பழனி தைப்பூசத்தை ஒட்டி மலை கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் யானை பாதை வழியாக மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. படிப்பாதை வழியாக பக்தர்கள் கீழே இறங்குகின்றனர். மலைகோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையம், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தைப் பூசத்தன்று மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
source: oneindia.com
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.