குவைத் தீ விபத்தில் காயமடைந்த கோவில்பட்டி இளைஞர் உயிரிழப்பு – குடும்பத்தினர் கண்ணீர்

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன்

கோவில்பட்டி: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாரியப்பனின் தாய் வீரம்மாள் கூறுகையில், “மாரியப்பன் கடந்த மார்ச் மாதம் மாசி சிவராத்திரியையொட்டி ஊருக்கு வந்திருந்தார். மார்ச் கடைசி வாரத்தில் தான் அவர் மீண்டும் குவைத்துக்குச் சென்றார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் என்னிடம் செல்போனில் பேசி நலம் விசாரித்தார்.முதலில் இந்த விபத்தில் அவர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றனர். இப்போது இறந்து விட்டதாக கூறுகின்றனர். இது எங்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளது,” என்றார்.

இந்த நிலையில், கணவர் இறந்த செய்தி கேட்டு மாரியப்பனின் மனைவி கற்பகவள்ளியும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!