“ஆஸி.க்கு எதிராக இந்தியா பந்தை சேதப்படுத்தியது” – இன்சமாம் குற்றச்சாட்டு | T20 WC

இந்திய வீரர்கள் | உள்படம்: இன்சமாம்

சென்னை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த திங்கட்கிழமை அன்று ஆஸ்திரேலிய அணியை 24 ரன்களில் வென்றது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்திய அணியின் இடது கை பவுலரான அர்ஷ்தீப் சிங், தனது இரண்டாவது ஸ்பெல்லில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய காரணமே பந்தை சேதப்படுத்தியதால் தான் என இன்சமாம் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில் அது குறித்து பார்ப்போம்.

“இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 16-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது அவர் வீசிய பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. டி20 ஆட்டம் என்பதால் எப்படியும் பந்து புதிதாகவே இருந்திருக்கும். அப்படி இருக்கும் சூழலில் எப்படி இது நடந்தது. இடைப்பட்ட ஓவர்களில் பந்து அதற்கு ஏற்ற வகையில் ரெடி செய்யப்பட்டதா. நடுவர்கள் கொஞ்சம் தங்களது கண்களை திறந்து பார்க்க வேண்டும்” என இன்சமாம் கூறியுள்ளார். இது பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் தெரிவித்தது.

இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனாலும் அந்த ஓவரில் அவர் விக்கெட் வீழ்த்தவில்லை. 18-வது ஓவரில் மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிடை வெளியேற்றினார். முதல் ஓவரில் டேவிட் வார்னரை அவுட் செய்தார். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!