உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நுரையீரலை வெட்டி எடுத்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனித பூமி
உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவருகிறது. தொடர்ச்சியாக உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்தியா முழுவதையும் உலுக்கிவருகிறது. இந்தநிலையில், நேற்று உத்தரப் பிரதேசத்திலுள்ள வனப் பகுதியிலிருந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் உடலிலிருந்து நுரையீரல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மாந்திரீகம் போன்ற இயற்கைக்கு புறம்பான செயலைச் செய்வதற்காக நுரையீரலை வெட்டி எடுத்துள்ளனர். அவ்வாறு சிறுமியின் நுரையீரலைக் கொண்டு மாந்திரீகம் செய்வதன் மூலம் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்று நம்பியுள்ளனர்.
இதுதொடர்பாக, சிறுமியை கொலை செய்த அன்குல் மற்றும் பீரான் என்பவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தெரிவித்த மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ப்ரஜேஷ் ஸ்ரீவட்சவா, ‘சிறுமியிடமிருந்து வெட்டி எடுத்த நுரையீரலை மாந்திரீகம் செய்வதற்காக பரசுராம் குரில் என்பவரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். பரசுராமும், அவரது மனைவியும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பரசுராமின் மனைவிக்கு தெரிந்திருந்தும் யாரிடமும் சொல்லாததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடக்கத்தில் பரசுராம், காவல்துறையை ஏமாற்றப் பார்த்தார்.
பின்னர், தீவிரமாக விசாரணை நடத்தியநிலையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதுவரையில் குழந்தை இல்லை. குழந்தை பிறப்பதற்காக மாந்திரீகம் செய்வதற்காக குழந்தையை கொன்று நுரையீரலை எடுப்பதற்கு பரசுராம் முடிவெடுத்துள்ளார். அதற்காக, அன்குல் மற்றும் பீரான், குழந்தையை கடத்தியுள்ளனர். அதனையடுத்து, அன்குல் மற்றும் பீரான் பத்ராஸ் கிராமத்தில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சனிக்கிழமை இரவு கடத்திச் சென்றுள்ளனர். அருகிலுள்ள காட்டுக்கு சிறுமியை கடத்திச் சென்ற அவர்கள், சிறுமியை கொலை செய்வதற்கு முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.