ஜனவரி 1 முதல் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகைக்கான காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்றும் ரிசர்வ் வங்கி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்புள்ளது.
இதனை தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணம் பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும். இதுவரை இந்த நடைமுறைதான் இருந்து வந்தது.
ஆனாலும் இதிலும் பல்வேறு பிரச்சனைகளும், நடைமுறை சிக்கல்களும், தகவல் பரிமாற்றம் தாமதமும் ஏற்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது.இதற்காக காசோலை துண்டிப்பு முறை என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த திட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்தவதற்கு முன் எஸ் எம் எஸ், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் யாருக்கு காசோலை தரப்படுகிறது. அந்த காசோலை உண்மையானதா என்பன உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யப்படும். ரூ.5 லட்சத்துக்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும்.
இந்த புதிய முறை குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ் எம் எஸ், வங்கிகளில் அறிவிப்பு பலகை ஆகியவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.