காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மின்வாரிய துறையில் 50,000 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாமல், ஒரு உப கோட்டத்திற்கு 20 பேர் வீதம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி மின்வாரிய பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின்வாரிய அமைச்சர் மின்சார துறையை தனியார் மயமாக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் மின் வாரிய தலைவர் மின்வாரிய துறையில் உள்ள பிரிவு பிரிவாக தனியார் மயமாக்கி கொண்டு வருகிறார்.

மேலும் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதனால் நான்கு பேர் பார்க்க வேண்டிய பணியை ஒரு நபர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

error: Content is protected !!