கன்னியாகுமரி தோவாளை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவர் கூட்டம் நடத்த எதிர்ப்பு.

குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவர் கவுன்சிலர் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்த பணிகளில் கமிசன் பெற்றது தொடர்பாக விசாரணை கேட்டும் திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தில்லு முல்லு செய்து அதிமுக வேட்பாளரை ஜெயிக்க வைத்தது, உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக டென்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறித்து அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார் சமீபத்தில் பரபரப்பு ஆடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தோவாளை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் தொடங்கியவுடன் திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பூதலிங்கம் பிள்ளை , ராஜேஸ்வரி, ஞானபாய் இம்மானுவேல் ஆகியோர், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் நண்பர் கிருஷ்ணகுமார் வெளியிட்ட ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்த பணிகள் தொடர்பான முறைகேடுகளுக்கு விளக்கம் கேட்டனர்.

மேலும், தங்களுக்கு அந்த ஒப்பந்த பணிகளில் சந்தேகம் எழுந்துள்ளதால் விசாரணை நடத்தவேண்டும் எனவும், முறைகேடு செய்து வெற்றி பெற்ற தலைவர் கூட்டத்தை நடத்தக்கூடாது எனவும் வலியுறுத்தினர். அதையும் மீறி கூட்டம் தொடர்ந்த நிலையில் மூன்று கவுன்சிலர்களும் திடீரென தலைவரின் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கவுன்சில் கூட்டம் நடந்தது. சில நிமிடங்களில் கூட்டத்தை முடித்து ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய நிலையில் திமுக கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் திமுக கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Reply

error: Content is protected !!