தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!திருச்சி பொன்மலையில் தொடங்கியது தொடர் மறியல் போராட்டம்!

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒரு வாரம் தொடர் மறியல் போராட்டம், இன்று (11.09.2020) தொடங்கியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை இந்திய அரசு பணியமர்த்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கொரோனா முழுமுடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டு இரயில்வேயில் 3,218 பேரை வேலையில் சேர்த்துள்ளது. இவர்களில் 90 விழுக்காட்டினர்க்கு மேல் இந்திக்காரர்களும், பிற அயல் மாநிலத்தவர்களும் ஆவர். திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்ட 541 பேரில், 400 பேர்க்கும் மேல் இந்திக்காரர்கள்! இதே இரயில்வேத் துறையில் இரண்டாண்டு பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களை இரயில்வே புறக்கணிக்கதாகவும்,

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016இல் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பிற மாநிலத்தவரும் சேரலாம்; வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளில் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்று அத்திருத்தம் கூறுகிறது.

ஆனால், கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், சத்தீசுகட், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, தனியார் துறை, இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு முறையே 100 விழுக்காடு, 90 விழுக்காடு, 80 விழுக்காடு – வேலை வழங்க வேண்டும் என்று சட்டங்கள் போடப்பட்டு செயல்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், கொரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு இன்று (2020 செப்டம்பர் 11) முதல் செப்டம்பர் 18 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.

அதன்படி, இன்று (11.09.2020) காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன் தலைமையில் முதல் நாள் மறியல் போராட்டம் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பூதலூர் ஒன்றியச் செயலாளருமான தோழர் பி. தென்னவன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் த. பானுமதி, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, சனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. சம்சுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

த.தே.பே. பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், பாவலர் நா. இராசாரகுநாதன், இரெ. கருணாநிதி, க. காமராசு, இனியன், வெள்ளம்மாள், தீந்தமிழன், விராலிமலை கிளைச் செயலாளர் தோழர் வே.பூ. இராமராசு, திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் தியாகராசன், ஜி.பி. பொறியியல் தொழிற்சங்கச் செயலாளர் திரு. நாகராசு, தஞ்சை மாவட்டச் செயற்குழு தோழர்கள் தேவதாசு, சி. ஆரோக்கியசாமி மற்றும் பொறியாளர் முத்துக்குமாரசாமி, சுங்கத்துறை முன்னாள் அதிகாரி திரு. சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

error: Content is protected !!