சதுரகிரி மலையில் பிரான்ஸ் நாட்டு பக்தர்… பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்!
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூரை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் சுமார் 4,500 அடி உயரத்தில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, தென்கயிலை என்னும் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
பஞ்சபூத லிங்கத் தலமாகும். இதில், சுந்தரமகாலிங்கம் சற்று இடதுபுறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு லிங்கமாகும். இத்தலம், 18 சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், சித்தர்கள் வாழும் அதிசய பூமி என்றும் அழைக்கப்படுகிறது. சதுரகிரி மலையில் ஏராளமான மூலிகைகளும், தீர்த்தங்களும், அருவிகளும் காணப்படுகின்றன.
தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழியாகவும், மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு வழியாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலுக்கு இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 2 நாள் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். இதன்படி, மார்கழி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு டிசம்பர் 28 முதல் நேற்று 4 நாள்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தினந்தோறும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்த நிலையில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர்.
வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கோவில்
அதனால் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் கொண்டுவரப்பட்டது, வனத்துறையினர் அனுமதி வழங்கினால் மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்குபக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பிரதோஷம் என்றாலே சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும் நிலையில் சனிப்பிரதோஷம் என்றால் இன்னும் சிறப்பு எனப்படுகின்றது. அதனால் இந்த வருடத்தில் இறுதியில் சனி பிரதோஷமானது வந்ததால் சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வனத்துறையினர் தீவிர சோதனை
6.30 மணிக்கு மலையேறும்நுழைவாயில் திறக்கப்பட்டது. வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கினார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமானோர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம்
சனி பிரதோஷம் என்பதால் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமாவாசை அன்று காலை 4.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
வெளிநாட்டு பக்தர்கள் சாமி தரிசனம்
காலையில் கடும் பனியும் மதியம் லேசான மழையும் பெய்தது, கடும் பனியையும், மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமில்லாமல் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் சுதாகர் (57) இவர் அந்நாட்டில் விநாயகர் கோவிலில் அர்ச்சராக இருந்து வருகிறார். சபரிமலைக்கு மாலை அணிவித்து யாத்திரை சென்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவில் போன்ற தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு மார்கழி அமாவசை அன்று சதுரகிரி வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் சதுரகிரி மலை சித்தர்கள் வாழும் அதிசய பூமி என்றும், இம்மலையில் அடர்ந்த காடுகளும், மூலிகை நிறைந்த மரங்களும், அதில் வாழும் பறவைகளும், இடை இடையே வரும் அருவிகளும், குருவிகளின் சத்தங்களும் மிக ரம்மியமாக உள்ளதாகவும், வாழ்க்கையில் ஒரு முறையாவது அனைவரும் இந்த மலைக்கு வந்துசெல்ல வேண்டும் எனவும் கூறினார். 4 நாட்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவனை தரிசனம் செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.