தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை.

தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை.

தேனி மாவட்டம் ,தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கட்டிட தொழிலாளி தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒரு பெண்ணிற்கு முழங்கை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கரந்தமலை (வயது40). கட்டிடத் தொழிலாளியான இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை செய்து கொண்டிருக்கும்போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் உள்ள பெருமாள் பட்டியில் நாட்டு வைத்தியம் பார்த்து சரியாகாததால், அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் சென்று பரிசோதனை செய்தபோது, கரந்தமலையின் தோள்பட்டை எலும்பில் தலைப்பகுதி இல்லாமல் உடைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பல நாட்களாக உரிய சிகிச்சை எடுக்காததால் அந்த பகுதியில் சீல் வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து சீல் அப்புறப்படுத்தப்பட்டது. தோள்பட்டை எலும்பில் தலைப்பகுதி இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள 5 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கரந்தமலை சிகிச்சை எடுக்காமல் வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் சிவரக்கோட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவ முகாமில் தோள்பட்டை வலிக்காக சிகிச்சை எடுக்க கரந்தமலை சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர்.

மருத்துவர்கள் அளித்த பரிந்துரை சீட்டுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 11ந்தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரை எலும்பு முறிவு பிரிவு மருத்துவத் துறை தலைவர் டாக்டர் பிரேம் குமார் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கரந்த மலைக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து மருத்துவமனை டீன் முத்து சித்ரா ஆலோசனையின் முடிவில், தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் கரந்த மலைக்கு தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ந் தேதி, கரந்த மலைக்கு செயற்கை மூட்டு பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அரிதான அறுவை சிகிச்சையை மருத்துவக் குழுவினர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சை செய்து முடித்த சில நாட்களில் கரந்தமலை பூரண குணமடைந்தார்.

இதே போல தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 45) என்ற பெண் கீழே விழுந்ததில் வலது கை மூட்டு பகுதியில் பந்து பகுதி உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் செயற்கை மூட்டு பொருத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதாரணமாக ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தோள்பட்டையில் செயற்கை மூட்டு பொருத்தி அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்வின்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், துணை முதல்வர் மணி மொழி, நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன், உதவி நிலைய மருத்துவர்கள் ஈஸ்வரன் ஆகியோர் உள்பட மருத்துவர்கள் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து முதல்வர் முத்து சித்ரா கூறும் போது முக்கியமான அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நபர்கள் வரும்போது தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆதார் கார்டுடனும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வருபவர்கள் பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்ட அட்டையுடன் வந்தால் விரைவில் அதற்கான நடவடிக்கை செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ள வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!