சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் சீமான் பேசினாரா?

நாதக தரப்பும், புதிய தலைமுறை தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.

“தேசத்துக்காக சிறை சென்ற சாவர்க்கரை இழிவுப்படுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்தவேண்டாமா?” என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் சீமான் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டிருந்த தேதியான ஜனவரி 27, 2025 அன்று, சீமான் ஈரோட்டில் ஆற்றிய பரப்புரையானது நாதகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அப்பரப்புரையை முழுமையாக கேட்டதில் எந்த ஒரு இடத்திலும் சீமான் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள கருத்தை பேசி இருக்கவே இல்லை அறிய முடிந்தது. தெளிவாக கூறவேண்டுமென்றால் அவ்வுரையில் சாவர்க்கர் என்ற பெயரையே அவர் கூறி இருக்கவில்லை.

இதனையடுத்து நாதக செய்தித்தொடர்பாளர் செ.பாக்கியராசனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில் ‘இத்தகவல் முற்றிலும் பொயானது‘ என்று அவர் உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் இத்தகவல் புதிய தலைமுறை நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.

இத்தேடலில் புதிய தலைமுறை வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக கால்நடை வளர்ப்பதை அரசு வேலையாக்க முடியும் என்று சீமான் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் “இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டு வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை இணையத்தில் தெளிவு செய்திருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் ‘வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது‘ என்று அவரும் உறுதி செய்தார்.

Conclusion

சாவர்க்கர் தேசத்துக்காக சிறை சென்றவர் என்று ஈரோடு பரப்புரையில் சீமான் பேசியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!