தனியார் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளையும் இலவசமாக சேர்க்கலாம் – 27-ம் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிப்பு..

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக வரும் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். 

2020-21 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், வரும் ஆக.27-ம் தேதி முதல் செப். 25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

”பெற்றோர்கள் முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

அப்போது புகைப்படம், பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.

சட்டப்பிரிவு 12 (1) (சி) கீழ், சேர்க்கை வழங்க, தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011, விதி எண் 4(1) படி எல்கேஜி அல்லது முதல் வகுப்பிற்கு மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் விண்ணப்பங்கள் வாங்கும்போது பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாமல் வழங்கவேண்டும்.

தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்”.என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!