அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யாவின் அற்புதங்களை மையமாக வைத்து தயாரிக்ககப்பட்ட ஒரு குடைக்குள் திரைப்படம் அய்யாவின் அவதார தினமான நாளை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அய்யாவின் அற்புதங்களை மையமாக வைத்து, ஒரு குடைக்குள் என்ற தலைப்பில் அபிமான நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இதற்கான படப்பிடிப்பு குமரி மாவட்டத்தின் அய்யாவின் பதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்றது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
இத்திரைப்படம் அய்யாவின் அவதார தினமான நாளை வியாழக்கிழமை (மார்ச் 4ம் தேதி) திரைக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் பக்தர்களின் வசதிக்காக இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை பொன் செல்வராஜ் இணை தயாரிப்பில், பிரபல இயக்குனர் கே.எல் உதயகுமார் இயக்கியுள்ளார். எஸ் ஆர் நிலா வசனம் எழுதியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார்.
அய்யாவின் அற்புதங்களை விளக்கும் ஒரு குடைக்குள் திரைப்படம் திரையிட்ட பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.