5000 கோடி ஊழல்… ஆர்.பி.உதயகுமாரை தேவர் சிலை சுவரில் கட்டி வைப்பேன் – மருது சேனை வேட்பாளர் பேச்சால் பரபரப்பு.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தோற்கடித்து திருமங்கலம் தேவர்சிலை சுவரில் கட்டி வைப்பேன் என அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதி நாராயணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரான மைசாராள் மற்றும் அமமுக கூட்டணிக் கட்சியான மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் மருது சேனை அமைப்பின் சார்பில் போட்டியிடும் ஆதிநாராயணனுக்கு திருமங்கலத்தில் மருது சேனை அமைப்பு மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் அதிகமான வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி வினோதினி மருது சேனை அமைப்பினரை தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும் மருது சேனை அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் உதயகுமாரின் தூண்டுதலின் பேரில் தடுத்து நிறுத்துவதாக கூறி உதயகுமார் ஒழிக எனவும் காவல்துறை ஒழிக என கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் போலீசார் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த மருது சேனை வேட்பாளர் ஆதிநாராயணன் தொண்டர்களிடையே பேசும்போது, முக்குலத்தின் துரோகியான உதயகுமாரை தோற்கடித்து திருமங்கலம் தேவர் சிலை சுவரில் கட்டி வைப்பேன். தைரியம் உள்ளவர்கள் அவரை வந்து அழைத்துச் செல்லலாம் என ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் தொகுதியின் அமைச்சர் 5000 கோடி வரை ஊழல் செய்திருப்பதாகவும் அதனை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்ய வேண்டும் . தொகுதியின் அமைச்சராக உள்ள ஆர் பி உதயகுமார் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதையும் செய்யவில்லை எனவும் நாங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் தொகுதியில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

மருது சேனையின் ஆதரவால் தென்மாவட்டங்களில் 20 தொகுதிகளில் கைப்பற்றுவோம் என பேசிய அவர் ஆளும் கட்சியினர் அதிக வாகனங்கள் வருவதை கண்டு கொள்ளாத காவல்துறையினர் எங்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

error: Content is protected !!