திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா? பல்வேறு ஆதாரங்களுடன் ப.ஜீவானந்தம்

திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா?

================================

ப.ஜீவானந்தம்

==================================

மீண்டும் திராவிடமா? தமிழ்த்தேசியமா? கருத்துரையாடல்கள் சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மதில் மேல் பூனையாக நின்று வேடிக்கை பார்ப்பது வியப்பாக உள்ளது. திராவிட கட்சிகளிடம் மடியேந்தி சீட்டுப் பிச்சை கேட்கும் நிலை இருப்பதால் திராவிட மறுப்பை பேசவே அஞ்சுகின்றன. 

கடந்த கால வரலாற்றில் ஆரிய-  திராவிட இனக் கோட்பாட்டை கடுமையாகவே கம்யூனிஸ்டுகள் மறுத்து வந்துள்ளனர்.

 கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் இதில் முதன்மையானவர். மொழிவழி தேசிய இன வரையறையை முன்மொழிந்து, திராவிட இன வரையறையை முற்றிலும் மறுத்துள்ளார். 

திராவிடம் குறித்து அவர் எழுதியவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தந்துள்ளோம்.

திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா?

===============================

“திராவிட நாடு” கோஷத்தை நியாயப்படுத்த பழைய இலக் கியங்களிலிருந்து சான்றுக் காட்டப்படுகிறது. பழைமையான தமிழ் இலக்கியம் எதிலாவது தமிழனை, திராவிடன் ‘ என்று குறிப்பிட்டிருக்கிறதா?

 “திராவிடன் ” என்ற சொல் தமிழ் சொல்லுமல்ல; பழைய இலக்கியம் எதிலும் அது காணப்படவுமில்லை. ஆகவே தொல் காப்பியம், புற நானூறு போன்ற சங்க நூல்கள், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பயிலப்படும், சிறந்த பழக்க வழக்கங்கள், அருமந்தன்ன சாதனைகள், உயர்ந்த ஒழுக்கங்கள் ஆகியவற்றை திராவிடப் பண்பாடு என்றும், திராவிடர் நாகரிகம் என்றும் கூறுவது ஆதாரமற்ற கருத்துரைகள்.

“திராவிடர்” என்ற சொல், ‘ழ’கரம் வராத சமஸ்கிருதப் பண்டிதர்கள் தமிழரை அழைத்த சொல். 

பின்னர், மேல் நாட்டிலிருந்து இங்கு வந்த சரித்திரம், மக்கள் வரலாறு, மொழி நூல் முதலிய கலைகளில் அறிஞர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வருணவழி இனங்களைக் குறிக்கும்போதும், தென்னிந்திய மொழிகளின் புராதன மூலக் குழுவைக் குறிப்பிடும் போதும், “திராவிட இனம்” அல்லது “திராவிடக் குழு” என்ற சொற்றொடர்களை உபயோகித்திருக்கிறார்கள். ஆகவே வடசொல் பண்டிதர்களையோ, ஸ்மித், கால்டுவெல் போன்ற சரித்திர, மொழிநூல் ஆசிரியர்களையோ ஆதாரம் காட்டி, தமிழனை திராவிட ‘னாக்குவது அழகுமல்ல, அவசியமுமல்ல.

பிற்காலத்தில் எழுந்த “திராவிட மாபாடியம்”, “திராவிடப் பிரகாசிகை” என்ற நூற்பெயர்களும் வடசொல் பண்டிதர்களின் கருத்துப்படி, தமிழைக் குறிப்பிடவே, “திராவிடம்” என்ற சொல் லைத் தாங்கி நிற்கின்றன. தாயுமான சுவாமிகளும் “திராவிடத்தில் சிறிது புகல்வேன் ” என்னும் பொழுது தமிழையே குறிக்கிறார்.

‘தமிழ் வழங்கிய நிலத்தைத் ‘தமிழகம்’ என்றே நமது முன்னோர்கள், அன்பு சொட்ட வாய்நிறையச் சொல்லியுள்ளார்கள். ‘திராவிடம்’ என்று அழைத்ததே இல்லை. நான்கு மொழி பேசும் நிலப்பரப்பையாவது, ‘திராவிடம்’ என்று பழைய இலக்கியத்தில் எங்கேனும் குறிப் பிடுகிறார்களா? இல்லை.

இலக்கியச் சான்றுகளைக் கொண்டு, தமிழகம் விந்தியமலை வரையில் பரந்து கிடந்தது என உறுதிப்படுத்திவிட முடியுமா? அதுவும் முடியாது. 

“சதுர் ஆரியம் வருமுன் முன் சகமுழுதும் நினது” என்று, மேனாட்டு ஆராய்ச்சி வல்லுநர் நூற்களில் திளைத்தவரும் ஆரியத்தை வெறுத்தவருமான “மனோன்மணியம் ” சுந்தரம்பிள்ளை கூறுகிறார். இந்தக் கூற்றை ஒப்புக்கொள்வதாயின், ‘தமிழ் உலகம் முழுவதும் பேசப்பட்டது’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். உலகம் முற்றும் தமிழகமாக இருந்தது என்பது நமக்கு கவைக்குதவாது.

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனுஅது உருகெழு குமரியின் தெற்கும்”

என்ற காரி கிழாரின் புறநானூற்றுப் பாடல், தமிழகத்தின் வடக்கெல்லை இமயமலை என்று கூறுகிறது. இதை ஒப்புக்கொள்ள முடியுமா? 

கிருஷ்ணா நதி வரை தமிழகம் பரவியிருந்ததென்று சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதாக டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் கூறுகிறார். எல்லை நிர்ணயக் கமிஷன் முன் இது பயன்படுமா?

‘தமிழகம்’ என்று பழைய இலக்கியங்களில் நெடுகலும் பேசப் படுவது, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுல கத்தையே” (பனம்பாரனார்). 

“தமிழ் வாம்பறுத்த தண்புனல் நாடு” என்று நெஞ்சை அள்ளச் சித்தரிக்கும் சிலப்பதிகாரமும், காக்கை பாடினியம், சிகண்டியார் போன்ற இலக்கண நூல்களும் வடக்கே திருப்பதி மலையும் தெற்கே குமரிமுனையும், கிழக்கும் மேற்கும் கடல்கள் என்றுமே தமிழ்நாட்டின் எல்லை கூறுகின்றன.

பவணந்தியின் ‘நன்னூல் பாயிரம், (இது மிக பிற்பட்ட காலத்து நூல்) “குணகடல், குமரி குடகம், வேங்கடம்” என்று தமிழ்நாட்டின் எல்லை கூறுகிறது. இது, அராபிக்கடல் வரையிலிருந்த தமிழ் நாட்டின் மேற்கெல்லையை, குடகுவரையில் குறுக்கிவிட்டது.

பழைய நூல்கள் வடுகர்’ என்றும் ‘தெலுங்கம்’ என்றும், கரு நாடர்’ என்றும், ‘கொங்கணர்’ என்றும் கூறுகின்றன.

 திவாகார நிகண்டு, ‘கொல்லம்’ (கேரளம்) என்று தமிழகத்தைச் சுற்றிக்கிடந்த ஒரு நாட்டைக் குறிப்பிடுகிறது.

பழைய இலக்கியங்களில் ஆரியர் என்ற சொல் பயிலப்படுகிறது. “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்!” என்று ‘திருவாசகம்’ கூறு கிறது.

 இங்கும் ‘திராவிடன்’ கண்டாய் என்று சொல்லவில்லை. “வடவாரியரோடு” என்று சிலப்பதிகாரத்தில் நல நாட்டினரைக் குறிப்பிடுகிற இடத்திலும், ‘திராவிடர்’ என்ற சொல் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இவ்வாறாக, பழைய இலக்கியச் சான்றுகளை நோக்கின், “திராவிட இனமும்” இருந்ததில்லை, “திராவிட நாடும்” இருந்ததில்லை என்பது விளங்கும்.

“திரவிட நற்றிரு நாடு” என்று ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை கூறியிருக்கிறார் என்று தி.மு.க.வினர் “திராவி- நாடு  கோஷத்தை நியாயப்படுத்த எடுத்துக்காட்டுகிறார்கள். 

அதே பாட்டில் “நில மடந்தை”யின் அழகொழும் முகாரவிந்தம், ‘பரதகண்டம்’ என்றும் அந்த முகத்தின் சிறு நெற்றி ‘தக்கணம்’ என்றும் அதில் அணிந்துள்ள பொட்டு ‘திரவிட நற்றிரு நாடு’ என்றும், அந்தப் பொட்டின் நறுமணமே ‘தமிழணங்கு’ என்றும் சுந்தரனார் வருணித்திருக்கிறார். 

அப்படியிருக்க, தி.மு.க.வினர், ‘ திரவிட நற்றிரு நாடு’ என்று குறிப்பிடுகிறார்களேயன்றி, அதற்கு முன்புள்ள  ‘எழிலொழுகும் பரதகண்டத்தையும்’,  ‘தமிழணங்கை’யும் ஏன் இணைத்துக் கூறுகிறார்களில்லை!

நன்றி: ப.ஜீவானந்தம் எழுதிய ” ஐக்கிய தமிழகம்” நூலிலிருந்து. (1954)

பொதுவுடைமைப் போராளிப.ஜீவானந்தம் நினைவு நாள் (18.1.1963) இன்று…திராவிடத்தின் முகத்திரை கிழிக்கும் கட்டுரைகளுக்கு ..

.

தொடர்ந்து இணைந்து இருங்கள் WWW.LEMOORIYANEWS.COM தமிழ் ஊடகம் நன்றி:- கதிர் நிலவன்

– கதிர் நிலவன்

பொதுவுடைமைப் போராளி
ப.ஜீவானந்தம் நினைவு நாள் (18.1.1963) இன்று…
திராவிடத்தின் முகத்திரை கிழிக்கும் கட்டுரைகளுக்கு …

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!