தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி! தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக – தேமுதிக கூட்டணி, மநீம-சமக-ஐஜேகே கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது. இதில், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணிக்கு அடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. பின்னர், 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நான்காம் இடம் பெற்றது. 2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இந்நிலையில், தேர்தலில், அமமுக மற்றும் மநீம கூட்டணிகளை பின்னுக்குத் தள்ளி, 6.85% நாம் தமிழர் கட்சி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு 3ம் இடத்தை பிடித்துள்ளதை அரசியல் விமர்ச்சகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததுடன் மக்கள் மாற்றத்த விரும்புவதாகவும் நாம் தமிழர் கட்சி எதிர்காலத்தில் ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்புகள் உள்ளன என கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
