கன்னியாகுமரி: விவசாயிகளுக்கு எதிரான போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் என நாகர்கோவில் நடந்த மறியல் போராட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்காக போராடும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக நிற்கும்.
கார்ப்பரேட் முதலாளிகள் லாபம் பெற இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.