இறையன்பு, உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா நாத் ஐ.ஏ.எஸ், மூன்றாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், நான்காவதாக அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இறையன்பு, உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கபட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச்செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.