வரலாற்றில் இன்று 02.12.2022

மதுரை மாநகரிலே அவரின் தமிழ்ச்சொற்பொழிவு கேட்க தமிழன்பர்கள் விருப்பப்பட்டனர். இராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த அவருக்கு திருக்குறள் நூலும், கம்பராமாயணம் நூலும் தேவைப்பட்டது. கூட்டம் நடத்துபவர்களிடம் கேட்டுப் பார்த்தார். எவரும் தம்மிடம் இல்லையென்றே கை விரித்தனர். பிறகு அருகில் உள்ள நூல் அங்காடியான புது மண்டபத்தில் விலைக்கு வாங்கி உரையாற்றினார். ஆனாலும் அவரின் உள்ளம் மகிழ்ச்சி கொள்ள வில்லை. செந்தமிழ் பிறந்த மதுரையிலே தமிழுக்கு தாழ்வு நிலை கண்டு மனம் வருந்தினார். அது முதல் பாண்டிய மன்னர்கள் எந்த மண்ணில் சங்கம் உருவாக்கினார்களோ அதே மண்ணில் தமிழுக்கென்று சங்கம் அமைக்க உறுதி பூண்டார். அவர் வேறு யாருமல்ல, நான்காம் தமிழ்ச்சங்கம் (1901) நிறுவிய தமிழ் வள்ளல் என்று போற்றப்படும் பாண்டித்துரை ஆவார்.
இவர் சேது நாட்டு அமைச்சர் பொன்னுச்சாமி தேவர்- முத்து வீராயி நாச்சியார் இணையருக்கு மூன்றாவது மகனாக 21.3.1867இல் பிறந்தார். இவரின் பெற்றோர் கடைச்சங்க காலத்தில் இறுதியாக ஆண்ட மன்னன் உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன் நினைவாக அப்பெயரையே பாண்டித்துரைக்குச் சூட்டினர்.
சிறுவயதில் தனது தந்தையை இழந்த பாண்டித்துரை முகவர் சேசாத்திரி என்பவரின் பொறுப்பில் வளர்ந்தார். அழகர் ராசு என்ற புலவரிடம் தமிழறிவை வளர்த்துக் கொண்டவர் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் துரை உயர்தர பள்ளியில் படித்து ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார்.
தனது பதினெட்டாவது வயதில் பாலவனத்தம் சமீன்தாராகப் பொறுப்பேற்றார். இராமசாமிப் பிள்ளை என்பாரிடமிருந்து சைவ தத்துவத்தை கற்றுக் கொண்டார். மதுரை சோமசுந்தர கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்ட காரணத்தால் இராமநாத புரத்தில் தாம் கட்டிய மாளிகைக்கு ‘சோமசுந்தர விலாசம்’ என்றும் பெயர் சூட்டினார்.
அந்நாளில் ஸ்காட்துரை என்ற பரங்கியர் திருக்குறளை எதுகை மோனையோடு திருத்தி வெளியிட்டார். “சுகாத்தியரால் திருத்தியும் பதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்” என்ற தலைப்பில் வெளியான அந்த நூலை பாண்டித்துரையாரும் வாங்கிப் படித்தார். முதல் பாடலே முற்றும் கோணலாய் இருந்தது. அப்பாடலில்,
“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு”
-என்று அச்சிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு கோபமடைந்த பாண்டித்துரையார் அந்த வெள்ளைப் பரங்கியரின் அறியாமைக்கும், செருக்குத்தனத்திற்கும் பாடம் புகட்ட விரும்பினார். அதன்படி மொத்தம் அச்சடித்த ஐநூறு பிரதிகளுள் விற்பனை செய்தது போக மீதமுள்ள முந்நூறு பிரதிகளை பணம் கொடுத்து வாங்கினார். பின்னர் ஆழக்குழி தோண்டி அந்தப்பிரதிகள் அனைத்தையும் போட்டு எரிக்கும்படி ஆணையிட்டார்.

இதைப் பாராட்டி பண்டிதர் அ.முத்துசாமிப் பிள்ளை என்பவர் பாடல் தீட்டினார். அது வருமாறு:
“வள்ளுவர் அருளிய மாண்புறு குறளைத் திருத்திய
வெள்ளையன் செய்கையை அறிந்து
வருத்தமுற் றதனை வாங்கித் தீக்கிரை ஆக்கியல் வெள்ளையற்(கு) அரும்பொருள் கொடுத்துப்
போக்கிய புண்ணியன் புவிபுகழ் கண்ணியன்”
பாண்டித்துரையார் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் தொல்காப்பியரை பிராமணர் என்றும், வடமொழி உயர்ந்ததென்றும், ஆரிய நாகரிகமே சிறந்தது என்றும் வைதீக பிராமணப் புலவர்கள் பேசி வந்தனர். இக்கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த பாண்டித்துரையார் மறைமலையடிகள் மூலம் பதிலடி தர விரும்பினார். 25.5.1905இல், “மதுரைத் தமிழ்ச்சங்க நான்காம் ஆண்டு விழாவும் -தமிழர் நாகரிகப் போராட்டக் கொடி ஏற்றமும்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் உரையாற்றிய மறைமலையடிகள் ஆரிய நாகரிகத்திற்கும், பிராமணர்களுக்கும் தமிழர் கடமை பட்டிருக்க வில்லை என்றும், ஆரியர்களால் தான் தமிழும், தமிழரும் பாழ்பட நேர்ந்தது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி பிராமணர்களின் வாயடைத்தார். அப்போது அதைக் கேட்டு வெகுவாக இரசித்த பாண்டித்துரையார் மறைமலையடிகளுக்கு பாராட்டுரை வழங்கினார்.
1906இல் வ.உ.சிதம்பரனார் பரங்கியருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஒரு இலட்சம் ருபாயை தனது பங்குத் தொகையாக பாண்டித்துரையார் வ.உ.சி.க்கு அளித்தார். இதன் மூலம் அவரின் தமிழினப் பற்றும், இந்திய விடுதலைப் பற்றும் ஒரு சேர வெளிப்படுவதை உணரலாம்.
ஆரியர் தமிழரை அழைத்த ‘திராவிடர்’ என்ற சொல்லுக்கு ‘ஓடுதல்’ என்ற பொருளும் உண்டு என்பதை தாம் எழுதிய ‘தமிழ்ப் பழஞ்சரிதம்’ நூலில் பாண்டித்துரையார் குறிப்பிட்டார். இதனை தொடர் கட்டுரையாக தமது ‘செந்தமிழ்’ ஏட்டிலே எழுதினார். அது பின்வருமாறு:
“தமிழணங்கு ஆந்திரம், கன்னடம், முதலிய சேய்களைப் பிறப்பியாது தனியிளமை பெற்று விளங்கிய காலத்திலே, அந்நங்கை தனக்கு ஆடலரங்கமாகக் கொண்ட பிரதேசம் வடவேங்கடந் தென்குமரியாயிடை யன்று. வடவியந்தென்குமரியாயிடையே. அவ்வாறிளமை பெற்றிருந்த தமிழ் பின்பு ஆரியர் படையெடுப்புகளால் அலைப்புண்டு, தன் ஆடலரங்கைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. அன்றியும் அவ்வந்நியரது கூட்டுறவை வெறுத்து அத்தமிழ் நங்கையோடி யொளியுமிடங்கள் பலவற்றில், தான் பெற்ற சேய்களை அங்கங்கே விட்டுப் பிரியவும் நேர்ந்தது. இவ்வாறு தமிழணங்கு தம்மையஞ்சியோடி ஒளிவது கண்ட ஆரியர் அந்நங்கைக்குத் ‘திராவிடம்’ என்னுங் காரணப்பெயரை வழங்கலாயினர். (திராவிடம் என்னும் மொழிக்கு வடமொழியில் ஓடுதலையடையதென்பது பொருள்).
தமிழ்பணியே வாழ்நாள் பணியாக மேற்கண்ட பாண்டித்துரையார் ஒருநாள் தம் மாளிகையில் பலருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று மயக்கமுற்று கீழ விழுந்தார். அப்போது நினைவிழந்தவர் மறுபடியும் மீள வில்லை. அவர் 2.12.1911இல் தமிழ் மண்ணை விட்டு உயிர் நீத்தார்.
‘மொழி ஞாயிறு’ பாவாணர் தனது ‘பாண்டித்துரை பதிகம்’ பாடலில் கூறியதையே இந்நாளில் நாமும் கூறிடுவோம்.
“தென்மதுரைப்பாண்டியன் தெய்வத் தமிழ்வாழி நன்மதுரை நாலாஞ்சங் கம் வாழி – சொன் மதுரப் பாலவ நத்தம் வேள் பாண்டித் துரைத்தேவன் போலிமை யற்ற புகழ்!”
- மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் நூலிலிருந்து.
நன்றி: கதிர் நிலவன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.