வந்தாச்சு உள்ளாட்சி தேர்தல்… மே மாதத்தில் நடத்தும் தேர்தல் ஆணையம்!

வந்தாச்சு உள்ளாட்சி தேர்தல்.. மே மாதத்தில் நடத்தும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட அளவில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்டவைகள் காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக, அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.

தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026க்கு பிறகு நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டு, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அது மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் நான்கு மாநகராட்சி கவுன்சிலர் பதவி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 315 இடங்களுக்கு ஊரக நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் காலியாக இருக்கிறது. இதை அடுத்து அந்த பகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. மே மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகள் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகள், ஏற்பாடுகள், வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட அளவில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!