
மதுரையில் நேற்று நள்ளிரவு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பொதுமக்கள் தங்களின் வாகனங்களை வீட்டிற்கு வெளியிலும் நிறுத்துவது சாதாரண விஷயம்தான்.
அதேபோல் ஆட்டோக்களை தங்களின் வீட்டிற்கு முன் நிறுத்த முடியாத ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களுக்கான ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்வார்கள்.
இரவில் வாகனங்களை நிறுத்திவிட்டு காலையில் எடுத்து கொண்டு தங்களின் பணிகளை தொடர்வார்கள். அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் உள்ள 50 அடி சாலையில் இருந்து கம்மாக்கரை சாலை வரை வாகனங்களை நிறுத்துவிட்டு வழக்கம் போல் அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதன்பின் இன்று காலை வந்து வாகனங்களை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
25 வாகனங்கள் சேதம்
ஏனென்றால் செல்லூர் 50 அடி சாலை முதல் கம்மாக்கரை சாலை வரை சுமார் அரை கிலோ மீட்டருக்கு நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பின் வாகனங்களை எப்படி ஒரே இரவில் சேதப்படுத்த முடியும் என்று சந்தேகம் கொண்டு அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இன்னொரு பக்கம் காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
17 சிறுவனின் வெறிச்செயல்
அந்த சிசிடிவி காட்சியில், சிறுவன் ஒருவன் ஜேசிபி வாகனத்தை எடுத்து கொண்டு மொத்தமாக 25 வாகனங்களையும் அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், டிராக்டர் என்று பல்வேறு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. கவுன்சிலரின் வாகனத்தையும் விட்டு வைக்கவில்லை. இதன்பின் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவனை பிடித்த பொதுமக்கள், உடனடியாக போலீசில் ஒப்படைத்தனர்.
வீட்டில் சண்டை?
அதேபோல் சிறுவன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் தனது வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போட்ட பின், ஜேசிபி வாகனத்தை இயக்கி இந்த செயலில் சிறுவன் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
போதையில் சிறுவன்
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், இரவு 2.15 மணி இருக்கும்.. ஒரு ஜேசிபி வைத்து வாகனத்தை இடிக்கிறார்.. ஒரு இடத்தில் இடித்துவிட்டு மற்றொரு இடத்திற்கு சென்று அடித்து நொறுக்குகிறார்.. உள்ளே இருந்து கொண்டு கற்களை வீசுகிறார்.. அவரை பிடித்து நிறுத்திய போது, போதையில் இருந்தார்.
காவல்துறைக்கு அழைத்த போது உடனடியாக எந்த பதிலும் இல்லை. ஒரு மணி நேரத்திற்கு பின்னரே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். எனது ஷேர் ஆட்டோ நொறுக்கப்பட்டுள்ளது. இதனால் 2 மாதங்கள் என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு நிச்சயம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.