திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பாடு… அண்ணாமலையிடம் கையும் களவுமாக சிக்கிய நவாஸ் கனி!

திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பாடு… அண்ணாமலையிடம் கையும் களவுமாக சிக்கிய நவாஸ் கனி!

இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை நவாஸ் கனி அவரது சமூக வலைதள பக்கத்திலேயே பகிர்ந்து இருந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்கு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் மலையில் அமர்ந்து நவாஸ் கனி அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலையில் நான் பிரியாணி சாப்பிட்டேன் என நிரூபிக்காவிட்டால் அண்ணாமலை பதவி விலகுவாரா? அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் தமிழக பாஜக தலைவரின் பொறுப்பில் இருந்து பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை நவாஸ் கனி அவரது சமூக வலைதள பக்கத்திலேயே பகிர்ந்து இருந்த நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இரண்டு நாட்களுக்கு முன்பாக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைக்கு, தனது ஆதரவாளர்களுடன் சென்ற, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி, ஹிந்து மக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து, அவருடன் வந்தவர்கள் அசைவ உணவு உண்ணும் புகைப்படத்தை, அவரது சமூக வலைத்தளப் பக்கத்திலேயே பகிர்ந்திருந்தார்.

பொதுமக்கள் மற்றும் பாஜக சகோதர சகோதரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தற்போது அசைவ உணவு உண்டதை நிரூபித்தால், தனது பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார். அப்படிக் கூறும் காணொளியிலேயே இறுதியாக, தனது ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில், அசைவ உணவு உண்டதையும் ஒப்புக்கொள்கிறார்.

நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கட்டுப்படுவேன் என்ற உறுதிமொழியை ஏற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திரு.நவாஸ் கனி, அதனை முழுமையாக மீறியிருக்கிறார். மேலும், திருக்கோவில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் ஒரே நோக்கம், ஹிந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே.

தான் கூறியதைப் போல, கோவில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக அவர் பதவி விலகுவதோடு, தமிழ் மக்களின் மனம் புண்படும்படி, முருகப்பெருமான் திருக்கோவிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!