

நெல்லையில் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்களை இடிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 410 தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள், கழிவறைகள், இதர கட்டுமானங்கள் இடிக்க வேண்டிய ஆபத்தானநிலையில் இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தெரிவித்திருந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 100 பள்ளிகளின் கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தபணிகள் இன்று முதல் தொடங்கும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களை உள்ளாட்சித்துறையும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி கட்டிடங்களை பொதுப்பணித்துறையினரும் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 73 பள்ளிக்கூடங்களில் பழமையான, சேதமடைந்த கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையும் இடிக்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானங்களை பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. முதற்கட்டமாக 30 பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பழமையான, சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் 80 கண்டறியப்பட்டுள்ளன. இதனை இடிக்க கல்வித்துறை கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் தரமற்றதாக அடையாளம் காணப்பட்ட 200 பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். இதில் 120 வகுப்பறை கட்டிடங்கள், 80 கழிவறை கட்டிடங்களும் அடங்கும். மேலும் இந்த கட்டிட பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி கட்டிடங்களை இடித்து இடிபாடுகளை உடனடியாக அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் என 1,531 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. உதவி பொறியாளர்கள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிப்பறைகளை ஆய்வு செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யும் பணி வருகிற 20-ந் தேதி முதல் தொடங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்திருந்தார்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள1230 அரசு பள்ளி ,அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்..

பள்ளியின் கட்டிடத்தின் தன்மை மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்யும் இந்த குழுவினர் தரமற்ற பள்ளி கட்டிடங்கள் தொடர்பாக கணக்கெடுத்து அந்தப் பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்னர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் சுமார் 50-க்கு மேற்பட்ட கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது பள்ளிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மீண்டும் பள்ளிகளை ஆய்வு செய்து தரமற்ற கட்டிடங்களை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பித்ததும் அந்த கட்டிடங்களை இடிக்க தமிழகம் முழுவதும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 348 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் நேற்று 70 பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டு மீதம் உள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது இடிக்கப்பட்டு வந்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சி, குள்ளஞ்சாவடி கிராமத்தில் பள்ளி கட்டிடத்தை இடித்த போது மேல்தளத்தில் காண்கிரீட் இன்றி அடுக்கடுக்காக செம்மண், கரிசல் மண், வண்டல் மண், போன்றவைகள் வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்ல வேலை இப்பள்ளி கட்டிடம் தரமற்று , பழுதடைந்து தற்போது அரசின் முயற்சியால் இடிக்கப்பட்டு வருகின்றனர்.இல்லையென்றால் எங்கள் ஊர் பள்ளி மாணவ,மாணவிகளின் உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்காது என வேதனை அடைந்தனர்.
மீண்டும் இதுபோல ஒப்பந்ததாரர்கள் இதுபோன்று செய்யாமலிருக்க அரசு அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ,இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.