கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
1 கிலோ கிராம்பிற்கு கடந்த ஆண்டு 1000 ரூபாய் விலை கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 500 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை.
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கிராம்பிற்கு மத்திய அரசு அளித்துள்ள வரி விலக்கை திருப்ப பெற வேண்டும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.
நறுமண பொருட்களில் கிராம்பு மிக முக்கியமானது , கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் மருத்துவ துறையில் கிராம்பு ஒரு இன்றியமையாத பொருளாக விளங்கி வருகிறது இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராம்பு குமரி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் பயிரிடப்படுகிறது, தடிக்காரன்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மாறாமலை, பாலமோர் , கரும்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 1000 டன் வரை கிராம்பு உற்பத்தியாகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை கிராம்பு அறுவடை செய்யும் காலமாக உள்ளது. தற்போது கரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கிராம்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக புதுக்கோட்டை, மதுரை, தேனி, வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலத்தில் இருந்தும் கூட ஏராளமான தொழிலாளர்கள் இந்த தோட்டங்களில் தங்கியிருந்து அறுவடை பணிகளை செய்து வருகிறார்கள். இங்கு அறுவடை செய்யப்பட்ட கிராம்புகளை சமதள வெளியில் உலரவைத்து பின்னர் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
தற்போது குமரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் இந்த கிராம்பிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என கிராம்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர் கடந்த ஆண்டு 900 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்ட 1கிலோ கிராம்பு இந்த ஆண்டு 450 முதல் 500 வரை மட்டுமே விற்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்பு உலகத்தரம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கிராம்பிற்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் கிராம்புகள் இங்கு இறக்குமதி செய்து பின்னர் இங்கிருந்து இந்திய கிராம்பு என கூறி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இங்குள்ள கிராம்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
மேலும் மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்புகளை நேரடியாக அரசே கொள்முதல் செய்து உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிராம்பிற்கு வரி விதிக்க வேண்டும் என்றும் மலை தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கரும்பாறை மலைத் தோட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சிம்சன் கூறுகையில்;
குமரி மாவட்டத்தில் தரமான கிராம்பு விளைகிறது ஆனால் போதுமான விலை கிடைக்கப் பெறுவதில்லை கிராம்பு போதிய அளவில் சந்தைப்படுத்த படுவதில்லை. இதனால் கிராம்பு விவசாயிகளை பாதுகாக்க இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு கிராம்பிற்கு சரியான விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்து மானியம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் கிராம்பு இறக்குமதி ஆவதை கட்டுப்படுத்தி அதற்கு வரி விதித்தால் மட்டுமே இந்திய நாட்டின் கிராம்பு உற்பத்தியாளர்கள் இந்த பிரச்சனைகளிலிருந்து மீள முடியும். இதன் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மலைத் தோட்டங்களில் விளையும் இந்த கிராம்பை கரடுமுரடான மலைப்பாதையில் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் சாலை அமைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதனை தளர்த்தி சாலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.