கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காணி மடத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அஞ்சுகிராமம் எஸ்ஐ ஜெஸிமேனகா தலைமை தாங்கினார். முன்னாள் ஊர் செயலாளர் ராஜபாண்டியன், ஊர் தலைவர் விஜயன், செயலாளர் சௌந்தரபாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அஞ்சுகிராமம் எஸ்ஐ ஜெஸிமேனகா பேசியதாவது:
இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உங்களுடைய குறை நிறைகளை எங்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். நீங்கள் காவல்துறையை பார்த்து அச்சப்படத் தேவையில்லை உங்கள் குறைகளை தெரிவிக்க எந்த சிபாரிசும் தேவையில்லை. மேலும் காவல் துறைக்கு தகுந்த ஒத்துழைப்பை நீங்கள் வழங்கினால் எங்களால் எளிதாக குற்றச் செயல்களை தடுக்க முடியும்.
குடும்பத்தில் கணவன் மனைவி, மாமியார் மருமகள் உள்ளிட்ட குடும்ப பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் பெரியவர்கள் முன்னிலையில் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறு குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக குழந்தைகளை தேவை இன்றி வெளியே அனுப்பக்கூடாது. மேலும் அவர்களை மிக கவனமாக கையாள வேண்டும். ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் ஏனென்றால் இன்டர்நெட்டில் பல்வேறு தவறான விஷயங்கள் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும். அதனால் அவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் நடமாட்டம் இருந்தாலும், விற்பனை செய்வது சம்பந்தமாக தகவல் தெரிந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற திருட்டு, வழிப்பறி போன்ற பயங்கரவாத குற்றங்களை தவிர்க்கமுடியும். அதேபோல் முக்கிய தெருக்கள், வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது நல்லது. இதன்மூலம் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதுடன் எளிதில் குற்றவாளிகளை அடையாளம் முடியும்.
எனவே பொதுமக்கள் எதற்கும் அச்சப்படாமல் சந்தேகங்களை காவல்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சேவையாற்ற தான் உள்ளோம். என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் சரியான புரிந்துணர்வு மற்றும் நல்லுறவு இருந்தால்தான் சிறப்பான சேவையை எங்களால் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் தங்கப்பாண்டி ஆசிரியர், தங்கசாமி, தினேஷ், மல்கியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.