
விவசாயிகள் கதறல் – முதலமைச்சர் மௌனம்! தமிழ்நாட்டிற்கென தனி வேளாண் காப்பீடு திட்டத்தை துவங்க வேண்டும் – பி.ஆர்.பாண்டியன்
நெய்வேலி நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையை தமிழ்நாடு அரசு அரசியலாக்கி என் எல் சிக்கு துணைபோவதை வன்மையாக கண்டிக்கிறோம் என பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட பொருளாளர் நன்னிலம் நடராஜன் தலைமையேற்றார். மாநில பொதுச் செயலாளர் பிஆர்.பாண்டியன், தலைவர் எல் பழனியப்பன்அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன். செயலாளர் சரவணன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விஸ்வநாதன், நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் புலியூர் பாலு, செயலாளர் கமல்ராம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷா ரவி :திருவாரூர் மாவட்ட துணை தலைவர் எம் கோவிந்தராஜ், துணைச் செயலாளர் முகேஷ் ஒன்றிய செயலாளர் அகஸ்டின், தலைவர் அறிவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 என்கிற பெயரில் விவசாயிகள் பெற்ற சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மாவட்டங்கள் தோறும் சிப்காட் என்கிற பெயரில் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. காவிரி டெல்டாவில் காவிரி நீரை உரிய காலத்தில் பெற்று வழங்காததால் 3.50 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருக தொடங்கி இருக்கிறது. இதனை பார்த்து விவசாயிகள் கதறுகிறார்கள். முதலமைச்சர் மௌனம் காத்து வருகிறார்.நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500,கரும்பு டன் ஒன்றுக்கு ரூ4000 வழங்குவேன் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
மூன்றாண்டுகளாக கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது.தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பருத்திக்கு உரிய விலை கிடைக்காது விவசாயிகள் போராடி வருகிறார்கள். தொடர்ந்து தமிழக அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விவசாயி தொடர்ந்த வழக்கின் மீது தமிழக அரசின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் விவசாயிகளுக்கு எதிரான தமிழக அரசின் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக அரசியல் என்கிற பெயரில் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி திசை திருப்ப முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை கண்டித்தும் உடன் பெற்ற சுதந்திரம் பறிபோவதை மீட்டெடுக்க ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் தொடர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்குவது என முடிவெடுத்துள்ளோம். தமிழ்நாடு முழுமையிலிருந்து விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.