அந்த பயம் இருக்கட்டும்: நான் வந்து பேனா சிலையை உடைப்பேன்! பள்ளியை சீரமைக்க காசு இல்லை, பேனா சிலை வைக்க காசு ஏது?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பேனா சிலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கழிமுக பகுதியில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரிய ஆமைகளான பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவர் ரிட்லி ஆமைகள் வாழிடமாகவும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.
இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை கடலுக்குள் வைப்பதைதான் எதிர்க்கிறோம். அண்ணா அறிவாலயத்திலோ, கலைஞர் நினைவிடத்திலோ பேனாவை வைத்துக் கொள்ளலாமே! கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சின்னம் அமைக்க கடலுக்குள் கிட்டத்தட்ட அரை ஏக்கரை எடுக்கிறார்கள். அந்த இடத்தில் கல்லை கொட்டி, மண்ணை கொட்டி அதன் மேல் பேனா சின்னத்தை அமைப்பர். அதை பார்வையிட செல்லும் மக்கள் எதையாவது தின்றுவிட்டு போடுவார்கள். நெகிழியை போடுவர். பாலித்தீனை போடுவர். தண்ணீர் பாட்டிலை தூக்கி போடுவர். இப்படி ஒரு சீரழிவு தேவையா?
ஏற்கனவே நம்முடைய இந்திய நிலப்பரப்பு அளவிற்கு கடலுக்குள் குப்பைகள் இருப்பதாக கூறுகின்றனர். கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கும் போது, அதை கிழித்து பார்த்தால் வயிற்றில் பிளாஸ்டிக் தான் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் பேனா சின்னம் வைப்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாதா?
பேனா நினைவு சின்னம் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கலைஞரின் நினைவிடம் இருக்கு. நினைவு மண்டபம் கட்டுங்க. அங்கு வையுங்கள். அண்ணா அறிவாலயத்தில் வையுங்கள். யார் எதிர்க்க போகிறார்கள்?
எழுதாத பேனாவிற்கு சிலை. அது பகுத்தறிவு. எழுதுகிற பேனாவை ஆயுத பூஜை அன்றைக்கு வைத்து கும்பிட்டால் அது மூட நம்பிக்கை. இதுதான் உங்கள் சித்தாந்தமா?
அந்த பேனா என்ன ஐயா கலைஞர் எழுதின பேனாவா?
நீங்கள் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை. மக்களே நிதி தாருங்கள் என்று கேட்கிறீர்கள். அப்ப இந்த பேனா வைக்க எங்கிருந்து காசு வருகிறது. அதுவும் 81 கோடி ருபாய்?
முதியோர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க காசு இல்லை. ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. இதற்காக தான் ஓய்வு பெறும் வயதை 58 ஆக்கினீர்கள். 59 ஆக்கினீர்கள். இப்போது 60 ஆக்கிவீட்டீர்கள். எல்லாரையும் நிரந்தர பணியாளர்களாக எடுக்காமல் ஒப்பந்த பணியாளர்களாக எடுக்க இதுதான் காரணம். நிதி இல்லை நிதி இல்லை என்று கூறிவிட்டு இதுக்கு மட்டும் எப்படி பணம் வருகிறது?


வள்ளுவர் சிலையை கடலில் வைத்தார்கள் என்றால் அது ஏற்கனவே இருந்த பாறை. அதன் மீது கட்டமைத்து விட்டார்கள். இது அப்படி அல்ல. கடலை தோண்டி அதை நிரப்ப வேண்டும். இந்த விஷயத்தை பற்றி எந்த சூழலியல் வல்லுநரிடம் கேட்டாலும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு கடலுக்குள் வைப்பதால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என அவர் பேசியபோது கீழிருந்து சிலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டலிட்டதால் சலசலப்பு எழுந்தது. அப்போது சிலையை வைத்தே தீருவோம் என்று கீழிருந்து ஒருவர் கூட்டலிடவே, “நீ சிலையை வைத்தால் நான் பேனா சிலையை உடைப்பேன்” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!