பூட்டிய வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு; தொடர் கொள்ளையால் மக்கள் அச்சம்

புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பூட்டியிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1-ம் வீதியைச் சேர்ந்தவர் ஜான் தேவ சகாயம். இவர் பாதிரியாராக உள்ளார். இவரது மனைவி எஸ்தர் காலான் எழிலரசி. அரசுப் பள்ளி ஆசிரியர். இக்குடும்பத்தினர் அனைவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுவிட்டு இன்று (மே 28) ஊர் திரும்பினர்.

அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள இரும்புக் கதவின் கம்பிகளை அறுத்து, உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 80 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் கணேஷ் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் பூட்டியிருந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் 19.5 பவுன் நகை திருடப்பட்டது. இதேபோல, அறந்தாங்கியில் பூட்டியிருந்த 2 கடைகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த சுமார் ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இவ்வாறு பூட்டிய வீடு மற்றும் கடைகளை குறி வைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, காவல் துறையினர் இதுபோன்ற குற்ற செயல்களைத் தடுப்பதற்கு இரவு நேர ரோந்து பணிகளை அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!