
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தேனி மாவட்டத்தை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார்.
விருமன் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பல்வேறு திரையரங்குகளிலும் காலை முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ் சினிமாவில் உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் படங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. பாண்டிராஜ், முத்தையா போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் இன்னும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அவசர யுகத்தில் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் திருமணம் போன்ற விழாக்களில் மட்டுமே கொஞ்ச நேரமாவது பார்த்துப் பேச முடிகிறது. பலருக்கும் தனித்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. உறவுகளால் நாம் எவ்வளவு உன்னதமாக இருப்போம் என்பதை இந்தப் படம் உரக்கவே சொல்கிறது. இயக்குனர் முத்தையா தனது முந்தையப் படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் தூக்கிப் பிடிக்கும் கதைகளைத்தான் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் அதை லேசாக கைவிட்டிருக்கிறார்.
தன் அம்மா சரண்யாவின் மரணத்திற்குக் காரணமான அப்பா பிரகாஷ்ராஜ் மீது கொலை வெறி கோபம் கொண்டிருப்பவர் கார்த்தி. தன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்குக் கூட வராத அப்பா பிரகாஷ்ராஜையும், அண்ணன்கள் மூன்று பேரையும் தனது அம்மா மறைந்த வீட்டிற்கு வரவழைப்பேன் என்ற சபதத்தில் இருக்கிறார். பணத்தைப் பெரிதென நினைக்கும் பிரகாஷ்ராஜ், அப்பா பெயரைத் தட்டாத மூன்று மகன்கள் கார்த்தியின் பாசத்தைப் புரிந்து கொள்கிறார்களா, கார்த்தி தன் சபதத்தை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா என்பது நம்பிக்கை என்று சொல்லியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் இதுவரையிலும் ஒரு மோசமான அப்பாவை இப்படி காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதே சமயம் ஒரு மகனை எப்படி வளர்க்க வேண்டும் என படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வசனத்தை வைத்து ஒரு சிறந்த அம்மாவின் பாசம் எப்படியிருக்கும் என்பதையும் காட்டியிருக்கிறார்கள்.
தனது முதல் படமான ‘பருத்தி வீரன்’ படத்திலேயே கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் கார்த்தி. அதன்பின் முத்தையா இயக்கத்தில் அவர் நடித்த ‘கொம்பன்’ படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். அந்த இரண்டு படத்திலும் எப்படி பெயர் வாங்கினாரோ அதே போல இந்த படத்திலும் ‘விருமன்’ ஆக வீறு கொண்டு நிற்கிறார். அப்பாவாகவே இருந்தாலும் தப்பு தப்புதான் என்று சொல்லும் ஒரு கதாபாத்திரம். ஆக்ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அதே சமயம் அவ்வப்போது ‘பருத்தி வீரன், கொம்பன்’ கதாபாத்திரங்களும் எட்டிப் பார்த்துவிட்டுப் போகின்றன.
கதாநாயகி – அதிதி சங்கர்

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகியிருக்கும் படம். முதல் படம் என்று சொல்ல முடியாத நடிப்பு. நடனத்திலும், நடிப்பிலும் நன்றாகப் பயிற்சி பெற்றே களம் இறங்கியிருக்கிறார். அவருக்கான முத்திரை பதிக்கக் கூடிய காட்சிகள் குறைவுதான் என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ். கிராமத்துப் பெரிய மனிதர் என்று காட்டினால் வழக்கமான கதாபாத்திரம் போல இருக்கும் என ஒரு தாசில்தார் என அடிக்கடி பேண்ட், சட்டையில் காட்டிவிட்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மனோபாவம் கொண்ட, தான் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய கதாபாத்திரம். ஆனாலும், ஒரு கொடுமைக்கார அப்பா நம் கண்முன் தெரியாமல் போவது பலவீனமாக உள்ளது.
கார்த்தியன் தாய்மாமனாக ராஜ்கிரண். ஆனால் நடிகர் கார்த்திையை என் புள்ள… என் புள்ள என பல முறை இவர் கூறுவர் பார்வையாளர்களை குழப்பமடைய செய்தது.ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் இவருக்கான காட்சிகள் குறைவுதான். அந்தக் கொஞ்சக் காட்சிகளிலும் தாய்மாமனின் பாசத்தால் கலங்க வைக்கிறார்.

படத்தின் நகைச்சுவைக்கு சூரி. கிராமத்துப் படங்களும், கதாபாத்திரமும் கிடைத்துவிட்டால் மட்டுமே சூரி சுழன்றடிக்கிறார் இருந்தாலும் சூரியை மாற்றுத்திறனாளி போல் காட்ட நினைத்தது படத்தில் சற்றும் எடுபடவிடவில்லை. பிரகாஷ்ராஜின் இரண்டாவது மருமகளாக நடித்திருக்கும் மைனா, பல குசும்புத்தனமான வசனங்களில் சிரிக்க வைத்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.
சரண்யா, வடிவுக்கரசி, மனோஜ் பாரதி, வசமித்ரா, ராஜ்குமார், அருந்ததி, இளவரசு என படத்தில் பல கதாபாத்திரங்கள். ஆர்கே சுரேஷ்க்கு பொருந்தாத கதாபாத்திரம்.
விருமன் பாடல்கள்:
முத்தையாவின் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா முத்தான மூன்று பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே செவிகளில் கேட்டது போல் பார்வையாளர்களை உணர வைக்கிறது. கிராமத்துப் படங்களுக்கும் தன்னுடைய பின்னணி இசை பொருந்தும் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ஜாக்கியின் கலை இயக்கம் படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஒளிப்பதிவும், கலை இயக்கமும் திரையில் தெரியப்படுத்த அதிக மெனக்கட்டுள்ளார்கள் என பார்வையாளர்களே புருவம் தூக்குகின்றனர்.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் இழுவையாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்பா, மகனுக்குமான மோதல்தான் படத்தின் மையக்கரு என்றாலும் அனைத்து ரசிகர்களுக்குமான கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறார்கள். அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என உறவுகளுடன் நெருக்கமாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று சொல்லும் படம்.
நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பலமாக இருந்தாலும், இயக்கம், திரைக்கதை இரண்டிலும் சொதப்பியுள்ளார் இயக்குனர் முத்தையா. காலம் கடந்துபோன கதைக்களம், பிற்போக்கு தனமான வசனங்கள் என சலிப்பு ஏற்படும் வகையில் அமைந்துள்ளது விருமன். மேலும் பார்வையாளர்கள் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் பார்த்த படங்கைளை போலேவே உள்ளது என்றும் படத்தில் ஒன்னுமே இல்லை என்றும் இயக்குனர் முத்தையா கொடுத்த பில்டப்பிற்கு அளவிற்கு ஒன்னும் இல்லை, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் என இதுபோன்ற படங்களில் கார்த்தி ஏன் நடிக்கிறார் எனவும் இது போன்று இனி கார்த்தி நடித்தார் என்றார் சினிமாவை விட்டு வெளியேறும் வாய்ப்பைப் பெறவார் என்றும் பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்ச்சகர்கள் வேதனையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் நடிகர் கார்த்தி செம கூலாக நடித்துள்ளார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.