மதுரை திருப்பரங்குன்றம் அருகே சிகரெட் கடன் கொடுக்காததால் இளைஞர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து அடித்துக்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை, இரவு சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த அருண் பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று நபர்கள் பெட்டிக்கடையில் சிகரெட்டை கடன் கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த வினோத்தின் தாயார் சந்தன மேரி, தர மறுக்கவே அந்த மூவர் ஆபாச வார்த்தைகளில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த அவர்களிடம் வினோத் கேட்டபோது, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர், இதனால் பலத்த காயமடைந்த வினோத்தை அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். நேற்று மதியம் உடல் நிலை மோசமான நிலையில் வினோத்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர் கூறினார்.
உயிரிழந்த பெட்டிக்கடை வினோத்
எனவே அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். ஆனால் வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அங்கு கூறியுள்ளனர். இதுகுறித்து சிலைமான் காவல் நிலையத்தில் வினோத்தின் சகோதரி செல்வி கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.