ஊரடங்கு காலத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட நிவாரணம் வழங்கக் கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இருவார கால முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அத்தியவசிய பொருட்களான பால், காய்கறி மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்டவைகள் நண்பகல் 12 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டாக்சிகள், ஆட்டோக்கள் இயக்க அனுமதி இல்லை எனவும் ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி பல உயிர்கள் அன்றாடம் பறிபோவது மிகுந்த வேதனையளிக்கிறது. இதனை ஓரளவு தடுக்க முழு ஊரடங்கு பயன்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கருதுகிறது. அதே நேரத்தில்
“சாலையில் ஆட்டோக்களின் சக்கரம் சுழன்றால் தான் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை சக்கரம் சுழலும்”
என்பதை கவனத்தில் கொண்டு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு பிறப்பித்த காலங்களில் பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஆட்டோ தொழில் என்பது முற்றறிலுமாக பாதிக்கப்பட்டு, முடங்கிய தொழிலாக மாறியுள்ளது. 2020 மார்ச் 24 ல் துவங்கிய பாதிப்பு இன்றுவரை சீரடையவில்லை. இக்காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் வாழமுடியாத நிலை ஏற்பட்டு, தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளது.
கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்று வாழ்க்கை முறையில் கடுமையான சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் காலமாக மாறியுள்ளது. கடந்த ஆட்சியில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க மாதம் ரூபாய் 7500 வீதம் ஆறுமாத காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் பலகட்ட போராட்டங்களையும் நடத்தினோம். ஆனால் நலவாரியத்தில் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மட்டும் ரூபாய் 2000 தருவதாக அறிவித்து வழங்கினார்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களில் சுமார் 10% -க்கும் குறைவான ஆட்டோ தொழிலாளர்களே நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளனர்.
ஆட்சி மாற்றமும்…ஆட்டோ வாங்க மானியமும்:
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இக்கோரிக்கை கடைசிவரை பரிசீலிக்கபடவேயில்லை. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பணிசெய்வது என்று முடிவு செய்தோம். தாங்களும் தேர்தல் அறிக்கையில் புதிய ஆட்டோக்கள் வாங்க மானியமாக ரூபாய் 10,000 வழங்கப்படும் என அறிவித்து இருந்தீர்கள். இது மேலும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவு தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கு நாங்களும் பணிசெய்தோம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழகத்தின் முதல்வராக நீங்கள் பதவியேற்றுள்ளீர்கள். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு) சார்பில் புதிய அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் கடும் நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்றுள்ள அரசானது, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க இரண்டு வார காலம் முழு ஊரடங்கை அறிவித்ததோடு, ஆட்டோக்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்பட அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூபாய் 7,500 கொரோனா நிவாரணமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். வாகனங்களுக்கு எப்.சி எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் 2021 டிசம்பர் வரை கால நீடிப்பு செய்து அறிவிக்க வேண்டுகிறோம்.
கடனை கால நீட்டிப்பு செய்ய வேண்டும்:
மேலும் அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஆட்டோ வாங்குவதற்காக பெற்ற கடனுக்கான இ.எம்.ஐ தொகையை செலுத்த ஓராண்டு காலம் கால நீடிப்பு செய்திட வேண்டுகிறோம். இக்காலத்திற்கு உரிய வட்டியை முழுமையாக ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இக்காலத்தில் முரட்டுத்தனமான அடக்குமுறையை ஏவி, முழுமையான இன்சூரன்ஸ் பிரிமியத்தை வசூல் செய்கின்றன. இதனை தடுத்து நிறுத்தி ஓராண்டு காலத்திற்கு காலநீடிப்பு செய்திட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலே கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.குமார் மற்றும் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி அவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.