1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பின் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. நாடெங்கும் கயல், புலி, வில் அடங்கிய மூவேந்தர் கொடிகள் கி.ஆ.பெ.வி. அறைக்கூவலால் ஏற்றப்பட்டன.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்றபோது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந்தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்த வில்லை. அப்போது ,”நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாக சொல்லிப் புறப்பட வில்லை. நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என் புதை குழியே அதிகமாக வளர்க்கும்!” என்றார்.

எட்டயபுரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில், கி.ஆ.பெ.வி. பேசிய போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ.பெ.வி.யின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்பு போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தி சாதனை படைத்தார்.
நன்றி : மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் நூலிலிருந்து.
நூல் தொடர்புக்கு:
வெற்றித் தமிழன்
நன்றி :- ஆக்கம்: எழுத்தாளர் கதிர் நிலவன்

“
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.