தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு- அடங்காத இலங்கை..!அடக்காத இந்தியா..!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கலைச்செல்வன் என்ற மீனவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந் தேதி அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 

மீன்பிடிக்க சென்றவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் மீனவர்
கலைச்செல்வன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவரை இன்று காலை நாகை துறைமுகத்திற்கு மீனவர்கள் கொண்டு வந்தனர்.

அங்கிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நாகை பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்பொழுது துப்பாக்கி சூடு சம்பவத்தில் மீனவர் படுகாயம் அடைந்திருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இந்தியா கடற்படையினர் எதிர் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக மீனவர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!