சோழவந்தான் பகுதியில் சேதமடைந்த சாலைகள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்! சீரமைக்க பொதுமக்கள்-பக்தர்கள் கோரிக்கை.!

சோழவந்தான் பகுதியில் சேதமடைந்த சாலைகள்… கண்டுகொள்ளாத அதிகாரிகள்! சீரமைக்க பொதுமக்கள்-பக்தர்கள் கோரிக்கை.!

மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சோழவந்தான் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
முள்ளிபள்ளம் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் அருகே தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியும் ஆக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


இந்த பகுதியில் குருவித்துறை குருபகவான் கோவில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் உள்ள நிலையில் இந்தப் பகுதிக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் சாலைகளில் தேங்கிய மழை நீரால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சேரும், சகதியும் ஆகவும் குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோவில் வருடம் தோரும் திருவிழா நடைபெறக்கூடிய சிவ திருத்தலமான இந்த கோவிலை சுற்றி உள்ள மாட வீதிகளில் மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

கோவிலின் மாட வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பாதி பதித்த நிலையில் விட்டு சென்றதால் மழை பெய்தவுடன் தெருக்களில் மழை நீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.

மேலும் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக திருவேடகம் கிராமத்தில் ஏடகநாதர் கோயிலுக்கு எதிரிலேயே செயல்பட்டு வரும் நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் கோவிலை சுற்றியுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் பக்தர்கள் நலன் கருதி திருவேடகம் முள்ளிப்பள்ளம், ஊத்துக்குளி போன்ற சோழவந்தான் சுற்றியுள்ள பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!