
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி மரணம்… என்ன நடந்தது?
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த போண்டாமணி காலமானார். 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி. இவர் 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.
திரைப்படங்கள் தவிர சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்தார். சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 கிட்னியும் செயலிழந்த நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இதையடுத்து அவர் நடிப்பை கைவிட்டு அடிக்கடி அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் இன்று இரவு 10 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
2 சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவர் அடிக்கடி டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று வீட்டில் மயங்கி விழுந்து காலமாகி உள்ளார். அவரது மரணத்துக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது. இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
By Nantha Kumar R Oneindia
source: oneindia.com
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.